இலங்கை சிறுமி ஒருவருக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!

வரலாற்றில் முதல் தடவையாக, இலங்கை சிறுமி ஒருவர் பிரித்தானியாவின் தேசிய ஜிம்னாஸ்டிக் அணிக்கு தெரிவாகியுள்ளார்.

இலங்கையை பூர்விகமாக கொண்ட 11 வயதுடைய மினுலி சோஹன்சா என்ற சிறுமியே இவ்வாறு தெரிவாகியுள்ளார்.

அதேவேளை, கடந்த ஜூலை மாதம் பிரித்தானியாவில் நடைபெற்ற 'பிரிட்டிஷ் நசனல் சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக்ஸ்' போட்டியிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

இந்த போட்டியில், பிரித்தானியாவின் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வீரராக மினுலி சோஹன்சா களமிறங்கியுள்ளார்.

இந்தநிலையில் லண்டனில் வசிக்கும் இவர் தனது தந்தையின் உத்வேகத்தால் ஜிம்னாஸ்டிக்ஸில் சிறந்து விளங்குவதாக தெரிவித்துள்ளார்.

இவரது தந்தை குணரத்ன பண்டார, இலங்கையில் உள்ள பல பாடசாலைகளில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராக பணியாற்றியதுடன் இலங்கையில் தேசிய மட்டத்தில் பங்கேற்கும் வகையில் பல தடகள வீரர்களையும் உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தையின் பயிற்சியில் ஜிம்னாஸ்டிக் செய்த மினுலி, தனது 6ஆவது வயதில் பிரித்தானிய பயிற்சியாளரிடம் பயிற்சி பெறத் தொடங்கியுள்ளார்.

மினுலி பிரித்தானிய தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி பல போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.

இதேவேளை சமீபத்தில் மினுலி 'கிரேட் பிரிட்டன் ஜிம்னாஸ்டிக் நசனல்' அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஜெர்மனியில் நடைபெறவுள்ள Gutenberg cup international போட்டியில் முதல் முறையாக பிரித்தானிய தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கவுள்ளார்.

மேலும் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வதே சிறுமி மினுலியின் கனவு என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.