மகிந்தவின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு - மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல்


இலங்கையின் பிரபலமான தலைவர்களில் ஒருவராக மகிந்த ராஜபக்ச இருந்தாலும் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் காலம் வந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ''மகிந்த ராஜபக்ச போன்று இந்த நாட்டுக்கு சேவையாற்றிய தலைவர் வேறு யாரும் இல்லை. இருப்பினும் அவர் ஓய்வு பெறுவதற்கான காலம் நெருங்கிவிட்டது.

மேலும், எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லை.

நாட்டு மக்களின் நலனுக்காக ஐக்கிய தேசியக் கட்சியுடனும் மொட்டு கட்சியுடனும் இணைந்து பயணிக்கத் தயார் என ரணில் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் ஆணைப்படியே தேர்தல் நடத்தப்படும். போராட்டக்காரர்கள் விரும்பும் போது அதை நடத்துவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் விடயமாகும். வற்புறுத்தி நடத்தப்படும் தேர்தலில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் தம்மை நிராகரிக்கும் ஒரு நாள் வருமாயின் அன்று அரசியலில் இருந்து நாங்கள் விலகத் தயார். ஆனால் போராட்டக்காரர்களுக்கு பயந்து ஒருபோதும் அரசியலை கைவிட முடியாது." என லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.