வடக்கில் உள்ள தமிழ் தெரியாத காவல்துறையினர்! நீதி அமைச்சின் அதிரடி நடவடிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, தெரிவித்துள்ளார்

வரவு- செலவுத் திட்டக் குழு விவாதத்தின் இரண்டாம் நாளான நேற்று(23) பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்களின் வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 30 வருட யுத்த கால சூழ்நிலையின்போது, வடக்கில் எந்தவொரு இளைஞர் யுவதிகளுக்கும் காவல்துறை சேவையில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

அதனால் அப்பிரதேசத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தி எவரையும் இச்சேவையில் இணைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் நாம் 2016 ஆம் ஆண்டு புதியதொரு நடைமுறையைக் கொண்டுவந்திருந்தோம்.

காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியை புகட்டும் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம்.

ஆனால் அவ்வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் செயற்படவில்லை. எனவே அவ்வேலைத்திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.