எலிசபேத் ராணியின் இறுதி சடங்கு வரை காவலாக சென்ற சிப்பாய் மர்ம மரணம்!


பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பேளை அருகே காவல்காத்துச் சென்ற 18 வயது காவலாளி, ராணுவ முகாமில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ராணியின் இறுதிச் சடங்கில், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பேளையை இறுதிப் பயணம் வரை அவர் பாதுகாத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் மர்மமான முறையில் நடந்தது என்று தெரிவிக்கப்பட்ட போதும், விசாரணைக்குப் பிறகு, "சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை" என்றும் லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆனாலும், அவர் எப்படி, இறந்தார் என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக குதிரைப் படையின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

உயிரிழந்தவர், குதிரைப்படை சிப்பாயான ஜாக் பர்னெல்-வில்லியம்ஸ் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்பாற்றும் முயற்சியில் அவசர சேவைகள் நைட்ஸ்பிரிட்ஜில் உள்ள ஹைட் பார்க் பாராக்ஸிற்கு அழைக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அந்த சிப்பாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சவுத் வேல்ஸில் உள்ள பிரிட்ஜெண்டைச் சேர்ந்த ஜாக்கின் குடும்பத்தினர், நாளை அவரது நினைவாக நீல பலூன்களை பறக்கவிடத் திட்டமிட்டுள்ளனர்.

"ராணியின் இறுதிப் பயணத்தில் ராணிக்காக தனது கடமையைச் செய்கிறார்" என்று அவரது பெற்றோர் பெருமையுடன் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.