தமிழர் தாயகத்தை கூறுபோடும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் - ஒரு தேசமாக பொங்கியெழ அழைப்பு

திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரையில் எங்கள் நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கும்' என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ. கஜேந்திரன் ஆகியோர் நேற்று(30) நேரில் சென்று பார்வையிட்டனர்.

'திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரையில் எங்கள் நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கும்' என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ. கஜேந்திரன் ஆகியோர் நேற்று(30) நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தவை வருமாறு,

“தையிட்டி விகாரை அமைக்கப்பட்ட இடம் தனியாருக்கு சொந்தமானது. சட்ட விரோதமான இந்தக் கட்டட வேலைகள் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட போது, மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டங்களிலும் பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களிலும் இந்த சட்ட விரோத செயற்பாடுகளை வெளிப்படுத்தி இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.

ஆனால் இந்த விடயம் தொடர்பாக இன்னும் ஒரு விசேட கூட்டம் கூட்டப்படும் என வாக்குறுதி அளித்தும் இந்த கூட்டமும் இல்லாமல் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இராணுவத்தினரின் முழுமையான பங்களிப்போடு விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தையிட்டியில் மட்டுமல்ல, இன்று தமிழர் தாயக நிலப்பகுதி முழுவதிலும் சிங்களமயமாக்கல் வேலைத் திட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்த விடயத்தை ஐ.நா மாநாட்டிலும் பதிவு செய்திருக்கின்றோம்.

ஆகவே மக்கள் மட்டத்தில் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இன்று இந்தப் பகுதியில் உள்ள மக்களின் தொண்டைகளில் கைவைத்த நிலையில் தான், மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான நிலைமைக்குள்ளும் மக்கள் எங்களை அழைத்து இந்த விகாரை சம்பந்தமான பிரச்சினைகளை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில் இந்த மாதிரியான சட்டவிரோத, இனவாதப் போக்குக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரைக்கும், எங்களுடைய நிலங்கள் பறிபோய் கொண்டே இருக்கும்.

நாங்கள் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக எங்களுடைய முழு எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம். எங்களுடைய எதிர்ப்புக்களை தாண்டியே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலையை நாம் தான் உருவாக்க வேண்டும்” - என்றார்.