இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான பாடகி சின்மயி!

பாடகி சின்மயிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்.மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. தனது இசைத் திறமையாலும் தனித்துவமான குரல் வளத்தாலும் 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கலக்கிக்கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பெரும்பாலான நாயகிகளின் குரலாக ஒலிப்பது இவரது குரல்தான். சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா, தாம் தூம் படத்தில் கங்கனா ரணாவத், வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டி, அயன், கண்டேன் காதலை படங்களில் தமன்னா, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் திரிஷா, விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு பதிப்பில் சமந்தா என பெரும்பாலான நாயகிகளுக்கு இவர்தான் பின்னணி குரல் கொடுத்துவருகிறார்.சின்மயிக்கும் மாஸ்கோவின் காவிரி, வணக்கம் சென்னை படங்களில் நடித்த ராகுலுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ராகுல் தெலுங்கில் நாகார்ஜுனா நடிப்பில் மன்மதடு 2 என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். குழந்தைகளுக்கு திரிப்தா, ஷர்வாஸ் என பெயரிட்டுள்ளனர்.