தமிழரசு கட்சியின் மாநாடு..! சிறீதரன் போட்ட பதிவு

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மமே மறுபடியும் வெல்லும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடத்த இடைக்கால தடை விதித்து திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்றையதினம் (15.02.2024) எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு செயற்படும் வகையில் குறித்த இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி திறந்த நீதிமன்றில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மமே மறுபடியும் வெல்லும் என பதிவிட்டுள்ளார்.