யாழ் நகரில் எரிக்கப்பட்ட கடைகள் : பின்னணியில் புலம்பெயர்ந்த பெண்

யாழ். நகர்ப்பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பதில் பொறுப்பதிகாரி உப காவல்துறை பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் நேற்று (19) இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அண்மையில் யாழ் நகரில் இரண்டு கடைகள் கடைகள் எரிக்கப்பட்டதனால் 2 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் இதன்போது எரிந்தழிந்தன. மேலும் கார் ஒன்றும் எரிக்கப்பட்டதுடன் மோட்டார்சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

இவை தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் முறையிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர் மூன்று பிரதான சந்தேகநபர்களைக் கைதுசெய்தனர்.

இதேவேளை குறித்த சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு வாள் என்பன மீட்கப்பட்டன.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் ஒருவரின் பெல்ஜியம் வாழ் பெரியம்மாவின் நட்பு வட்டாரத்திலிருந்து விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இந்த விஷமச் செயலில் அவர்கள் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடைகளை எரிப்பதற்காக 12லட்சம் ரூபா பணமும், வாகனங்களை எரிப்பதற்காக 7 லட்சம் ரூபா பணமும் பெல்ஜியத்தில் இருக்கும் நபரிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுவதற்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

முதற்கட்டமாக ஒன்றரை லட்சம் ரூபா பணமும் அவர்களுடைய வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து குற்றச்செயல்களின் சூத்திரதாரியான பெல்ஜியம் வாழ் நபரை சர்வதேச காவல்துறையினரின் (Interpol) உதவியுடன் கைதுசெய்ய காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.