மன்னாரில் துப்பாக்கிச் சூடு - இருவர் உயிரிழப்பு

 

மன்னார், பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று(24) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று  காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா (வயது- 43) மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து (வயது- 56)  என தெரியவந்துள்ளது.

குறித்த இருவரும் இன்று (24)  காலை மோட்டார் சைக்கிளில் வயலுக்குச் சென்ற போதே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு,  இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனக் குறிப்பிடப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களின் விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த வருடம் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நொச்சி குளத்தைச் சேர்ந்த ஒருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பழிக்கு பழி வாங்கும் நோக்குடன் இச்சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் இது  தொடர்பாக அடம்பன்  காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.