வருடமொன்றுக்கு 1000 கோடிக்கு மேல் நன்கொடை - சாதனை படைத்த தமிழக தொழிலதிபர்

இந்தியாவின் அதிக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபர்.

எடில் கிவ் ஹூருன் இந்தியா அமைப்பு வருடம் தோறும் இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கும் நபர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், கடந்த ஆண்டு அதிக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அஸிம் பிரேம்ஜியை இந்த முறை பின்னுக்கு தள்ளி உள்ளார் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவுனரான ஷிவ் நாடார்.

இவர் கடந்த ஆண்டில் மட்டும் 1,161 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு நாளைக்கு 3 கோடி ரூபாய் வீதம் இவர் நன்கொடை வழங்கி உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸிம் பிரேம்ஜி 484 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இரண்டாவது இடத்திலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, 411 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி 3 வது இடத்திலும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் கௌதம் அதானி, 190 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி 7 வது இடத்திலும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமாக, 15 பேர் 100 கோடி ரூபாய்க்கு மேலாகவும், 20 பேர் 50 கோடி ரூபாய்க்கு மேலாகவும், 43 பேர் 20 கோடி ரூபாய்க்கு மேலாகவும் நன்கொடை அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

தனது ஷிவ் நாடார் பவுண்டேஷன் மூலம் கிட்டத்தட்ட 1,161 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ள ஷிவ் நாடார், தமிழகத்தை சேர்ந்தவர். இவர் இந்திய அளவிலும் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருக்கும் நிலையில், அவர் நன்கொடை செய்த தொகை குறித்த செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.