யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்த செவ்வந்தி : விசாரணையில் வெளியான மற்றுமொரு தகவல்


பாதாளகுழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றுக்குள் வைத்து கொலை செய்த பின்னர்,  சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலும் பதுங்கியிருந்தார் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தியிடமும், அவருடன் கைது செய்யப்பட்ட குழுவிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போதே, இலங்கையில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலை சம்பவத்துக்கு பிறகு செவ்வந்தி 4 நாட்கள் இலங்கையில் தலைமறைவாகி இருந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மித்தெனிய மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலேயே அவர் தலைமறைவாகி இருந்துள்ளார்.

அதன் பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கு மூன்று வாரங்கள் தங்கியிருந்த பின்னரே அவர் நேபாளம் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.கே.பாய் என்பவரே செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது. செவ்வந்தியுடன் கைதான அவர் பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹேல்பத்தர பத்மேயின் சகா எனவும் தெரியவருகின்றது.

சம்பவத்தை அடுத்து செவ்வந்தியுடன் இணைந்து அவரும் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய நிலையில் அவர் ஊடாகவே செவ்வந்திக்குரிய பணம் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

சாவகச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட தக்சாயினி நந்தகுமார் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த ஜீவராசன் கனகராசன் ஆகியோரை செவ்வந்தி, கெஹல்பத்தர குழுவினர் தங்களது நாசகார வேலைகளுக்காக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக தக்சாயினி செவ்வந்தியை போன்று உருவ ஒற்றுமையை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையில் இடம்பெற்ற முக்கிய குற்றச் சம்பவங்களுடன் இந்த குற்றவாளிகள் தொடர்பு இருக்கலாம் எனவும் இவர்களின் பின்னணியில் அரசியல் ஆதரவு இருந்துள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.