புதிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை:பிரித்தானிய அரசியலில் பரபரப்பு


நாடாளுமன்றில் கட்சி ஒன்றினால் கொண்டு வரப்பட்ட மசோதா ஒன்றுக்கு தனது கட்சியைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தமையால் ஆத்திரமடைந்த பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(keir starmer) அந்த ஏழு பேரையுமே கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டியுள்ளார்.

இதனால் பிரித்தானிய(uk) அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரித்தானியாவில், இரண்டு பிள்ளைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களில், இரண்டு பிள்ளைகளுக்கு மட்டுமே அரசின் சில சலுகைகள் கிடைக்கும். ஏனைய பிள்ளைகளுக்கு சலுகைகள் கிடையாது என்ற ஒரு விதி உள்ளது.

இதனால், அதிக பிள்ளைகள் இருக்கும் குடும்பங்கள் வறுமையில் வாடுவதாக பல அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன. எனவே, The Scottish National Party என்னும் கட்சி, இந்த விதியை நீக்குவதற்காக, மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது.

ஆனால், ஆளும் தொழிலாளர் கட்சி அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்தது. அதன்படி, மசோதாவுக்கு எதிராக 363 வாக்குகளும், ஆதரவாக 103 வாக்குகளும் கிடைக்க, மசோதா தோல்வியடைந்தது.

இதற்கிடையில், பிரதமரின் முடிவுக்கு எதிராக,தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதனால் கோபமடைந்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அதிரடியாக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தார். ஆறு மாதங்களுக்கு பிறகு பிரதமரின் முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவிக்கு வந்து சில நாட்களிலேயே, தன் சொந்தக் கட்சி உறுப்பினர்களையே பிரதமர் பணியிடைநீக்கம் செய்துள்ளதால் பிரித்தானிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.