மாவையின் பூதவுடலுக்கு கட்சி கொடி போர்த்தி அஞ்சலி


இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
அத்தோடு மதத் தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா, வீட்டில் வழுக்கி விழுந்த நிலையில் தலையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
அவருக்குச் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.
 
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு (29) காலமானார்.
 
இவருடைய பிரிவை தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல தமது அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர்.