ஈரானில் தாண்டவமாடிய இஸ்ரேல் : இன்று கூடுகிறது முக்கிய கூட்டம்

வியன்னாவில் (Vienna) சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று (16.06.2025) கூடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்தக் கூட்டத்தில் ஈரான் (Iran) அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மற்றும் யுரேனியத்தின் இருப்பு குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும், இஸ்ரேல் (Israel) நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களால் ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மையம் சேதமடைந்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency) உறுதி செய்துள்ளது.

அணுசக்தி மையம்

தெற்கு தெஹ்ரானில் இருந்து 400 கி.மீ., தொலைவில் உள்ள இஸ்பஹான் யுரேனியம் மாற்று ஆலை பயங்கரமாக சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனால், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் பல மாதங்கள் தாமதப்படுத்தப்படலாம். அதேவேளையில், 1,640 அடி ஆழத்தில் மலைக்குள் அமைந்துள்ள போர்டோ அணுசக்தி மையம் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளது.

இந்த சூழலில், வியன்னாவில் சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று கூடுகிறமை குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக செயற்பட்ட நிலையில், அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து தற்போது மத்திய கிழக்கில் பாரிய பதற்றம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.