காலமானார் சாந்தன்.. என்ன காரணம்?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

 32 ஆண்டுகளுக்கு மேலாக 7 பேரும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அவர்களை விடுவிக்க தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

 இதனை ஆளுநர் ஏற்கவில்லை. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் விடுதலை செய்தது.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்கு சென்று இயல்பு வாழ்க்கையை தொடர்ந்தனர்.

 மறுபக்கம் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சாந்தன், ரோபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தங்கள் வீடுகளுக்கு செல்லவில்லை.

 அவர்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள் என்ற காரணத்தால் நாடு திரும்ப முடியாத நிலை காணப்பட்டது.

 அவர்களை தாய் நாட்டுக்கு அனுப்புவதில் சட்ட சிக்கல் நிலவிய நிலையில், திருச்சியில் உள்ள இலங்கை தமிழருக்கான சிறப்பு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

திருச்சி சிறப்பு முகாம் சிறையைவிட மோசமாக இருப்பதாகவும், வெளியில் சென்று காற்று வாங்குவதற்கு கூட சுதந்திரம் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்து வந்தனர்.

 தங்களை இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 திருச்சியில் உள்ள சிறப்பு முகாம் சிறையை விட கொடுமையானதாக உள்ளது என்றும், நடை பயிற்சி செய்வதற்கோ நண்பர்களை பார்ப்பதற்கோ முடியவில்லை என வேதனை தெரிவித்து இருந்தனர்.

சிறைவாசிகளோடு பழகுவதற்கு கூட அனுமதி இல்லை என்றும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து பல மாதங்கள் அறையிலேயே தங்க வைக்கப்பட்டதால் பல நோய்களுக்கு உள்ளாவதாக தெரிவித்தனர்.

 மறுபக்கம் சாந்தனுக்கு முகாமில் உடல் நிலை மோசமானது. இதற்கிடையே அண்மையில் மத்திய அரசு சாந்தன் இலங்கை செல்வதற்கு அனுமதி வழங்கியது.

 இந்த நிலையில் சாந்தனுக்கு உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் இன்று காலை 7.50 மணியளவில் காலமானார் என்று ராஜீவ் காந்தி மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

அவரது உடலை யாழ்பானத்துக்கு எடுத்து செல்ல உள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.

 சிறையிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகளில் சாந்தன் தாய் நாடான இலங்கைக்கு செல்ல முடியாமல் காலமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.