அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையும் : சம்பந்தன் எச்சரிக்கை


தமிழ்பேசும் மக்கள் தமது தாயகமான வடக்கு - கிழக்கில் சுதந்திரமாக வாழும் வகையில் நியாயமான, நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்கக்கூடிய நிலைமை வடக்கு - கிழக்கில் ஏற்பட வேண்டும். எனவே, இந்த வருடத் தைப்பொங்கல் தமிழர்களுக்கு அதி முக்கியமான பொங்கல். இந்த வருடமும் இலங்கை அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

"இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ஒரு நியாயமான நிரந்தர அரசியல் தீர்வு எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இந்த நன்னாளில் பிரார்த்தனை செய்கின்றேன். இலங்கையில் நீண்ட காலமாகத் தேசிய இனப்பிரச்சினை தொடர்கின்றது. இன்னமும் அரசியல் தீர்வு காணப்படவில்லை.

இந்த நாட்டில் பெரும்பான்மை இனமாக வாழும் சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை இனமாக வாழும் தமிழ்பேசும் மக்களுக்கும் இடையில் அரசியல் சாசனம் ரீதியாக எந்தவொரு இணக்கப்பாடும் ஏற்படவில்லை.

இது சம்பந்தமாகக் கடந்த காலங்களில் பல பேச்சுவார்த்தைகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்றன. அந்தப் பேச்சுகளுக்குத் தமிழ்த் தரப்பினர் தம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கினர். ஆனால், இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசுகள் தீர்வை வழங்க முன்வரவில்லை.

இந்த நிலைமை இனியும் தொடர இடமளிக்க முடியாது. தமிழ்பேசும் மக்கள் எதிர்பார்ப்பது, தாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தங்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் எமது தமிழ்த் தாயகமான வடக்கு - கிழக்கில் சுதந்திரமாக வாழும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும்.

அதாவது அவர்களுடைய தலைவிதியை அவர்களே நிர்ணயிக்கக்கூடிய நிலைமை வடக்கு - கிழக்கில் ஏற்பட வேண்டும். ஆனபடியால் இந்த வருடத் தைப்பொங்கல் தமிழர்களுக்கு அதிமுக்கியமான பொங்கல். இந்த வருடமும் இலங்கை அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையலாம்.

நாம் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். இனியும் ஏமாற முடியாது. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் நியாயமான அரசியல் தீர்வு வேண்டும்.

உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் அந்தத் தீர்வு இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.