சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் : 11 மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை, மேலும் இருவர் கைது


சப்ரகமுவ பல்கலைக்கழக  மாணவனின் மரணம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

அத்துடன், நேற்று நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
குறித்த சந்தேக நபர்களை, பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


புஸ்ஸல்லாவை - இஹலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவன் கடந்த 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்டார்.

பகிடிவதைக்கு உள்ளானதை அடுத்து அந்த மாணவன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டில் பயின்றுவரும் நான்கு மாணவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால்  முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த மாணவர்கள் நால்வரும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது