இறுதி போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்: கமால் குணரட்ன மீது சபா குகதாஸ் சாடல்

''ஊடக அறிக்கைகளில் தமிழ் அரசியல்வாதிகள் சிறுபிள்ளைத் தனமாக சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்டுப் பிதற்றியுள்ளார்'' என்று தற்போதைய பாதுகாப்பு செயலரும் இறுதிப் போரின் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியுமான கமால் குணரட்ன கூறி வருவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (14.07.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் கூறிள்ளதாவது, கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் நடந்தால் இறுதிப் போரில் முக்கிய தளபதியாக வன்னிப் போர்க்களத்தில் நின்ற கமால் குணரட்ன மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்ற பயத்தினால் உளற ஆரம்பித்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக அரச படைகளினாலும் ஆட்சியாளர்களினாலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்படுகின்ற அநீதிக்கு ஆட்சியாளர்களினால் நீதி கிடைத்த வரலாறு இருக்கிறதா?

நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பை மதித்து நடந்த சந்தர்ப்பம் உண்டா? உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்களின் மூலம் நீதி கிடைத்ததா?

இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள் நாட்டில் நீதி கிடைக்கும் என நம்பத் தயார் இல்லை முழுமையான நம்பிக்கையை இழந்த பின்னர் சர்வதேச நீதியைக் கோரி உள்ளனர்.

போர்க்குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்படலாம்

இறுதிப் போரில் அரச படைகள் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் இனப்படுகொலைகள் யாவற்றுக்கும் பக்கச் சார்பற்ற விசாரணை நடப்பதாக இருந்தால் கமால் குணரட்ன உட்பட்ட குழுவினர் போர்க்குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளதால் பிதற்றுகிறார் பாதுகாப்பு செயலாளர். 

ஏப்ரல் 21 படுகொலைக்கு கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை ஏன் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் கதவினை தட்டினார் என்பதைக் குறுகிய காலத்தில் கமால் மறந்து விட்டாரா?

கர்தினால் உள் நாட்டில் நீதி கிடைக்காமையால் தான் சர்வதேசத்தின் கதவுகளைத் திறந்து நீதியைப் பெற்றுத் தருமாறு கேட்டார் என்பதை உலகமே அறியும் கமாலின் கருத்தைப் பார்த்தால் கர்தினால் சிறுபிள்ளைத் தனமாகவா நடக்கிறார்? என குறிப்பிட்டுள்ளார்.