ரஷ்ய அதிபருக்கு நேர்ந்தது என்ன : உச்சக்கட்ட பரபரப்பில் ரஷ்ய மக்கள்

ரஷ்ய அதிபரின் உடல்நிலை குறித்து கடந்த சில காலங்களாக பல்வேறு தரப்பிலிருந்தும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கும் நிலையில், இப்போது புடினிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக புதிய பரபரப்புத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் விளங்குகிறார். அங்கே பல ஆண்டுகளாக அவர் அதிபர் பதவியினைத் தொடரும் நிலையில், சாகும் வரை அதிபர் பதவியில் இருக்கும்படி சட்டத்தையும் மாற்றி அமைத்துள்ளார்.

அங்கே பெயரிற்கு தேர்தல் என்ற ஒன்று நிகழ்ந்தாலும் கூட ஈற்றில் இவரே அதிபராகவும் வருவது வழக்கமான விடயமாகவுள்ளது.

இதற்கிடையே ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலை குறித்தும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.

அந்தவகையில் அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அதற்காகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கடந்த காலங்களில் வெளியானது.

மேலும், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்ததால் ஏற்பட்ட ஊசி அடையாளங்களையும் அவரது கையில் காண முடியும் என்றும், நரம்பியல் பிரச்சினை இருப்பதனால் அவரால் தனது கால்களைக் கட்டுப்படுத்த முடியாது இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ரஷ்ய அதிபர் புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, ரஷ்யாவின் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் ஒருவர், அங்கே நடக்கும் சம்பவங்கள் குறித்த தகவல்களை மேற்குலக ஊடகங்களுடன் பகிர்வதுண்டு.

அந்த நபரே ஞாயிற்றுக்கிழமையன்று இரவு புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.

அன்றைய தினம் இரவு 9 மணியளவில் புடின் அறையில் இருந்து ஏதோ சத்தம் வந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அங்கே சென்று பார்த்துள்ளனர். அப்போது தரையில் படுத்தபடி புடின் இருந்ததாகவும் அவரின் அருகே இருந்த மேசை கவிழ்ந்து இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதன் காரணமாகவே மேசை மற்றும் உணவை அவர் தட்டி விட்டிருக்கலாம் என்றும் ஜெனரல் எஸ்விஆர் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட சத்தம் காரணமாகவே புடினை சரியான நேரத்தில் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர் என்றும் ரஷ்ய அதிபர் மாளிகையில் எப்போதுமே மருத்துவர்கள் இருக்கும் நிலையில், அவர்களை அழைத்து முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிபர் மாளிகையிலேயே மருத்துவ வசதிகளைக் கொண்ட அறைக்கு புடினை மருத்துவர்கள் கொண்டு சென்றனர்.

அங்கு முதற்கட்ட சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சரியான நேரத்தில் மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டதால் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் சிறிது நேரத்தில் புடின் சுயநினைவு பெற்றார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதனை ரஷ்ய அதிபர் மாளிகை ஒப்புக் கொள்ளவும் இல்லை மறுக்கவும் இல்லை, தொடர்ந்து மௌனமாகவே இருந்து வருகிறது.

கடந்த காலங்களிலும் கூட புடினின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகும் சமயத்தில் ரஷ்ய அதிபர் மாளிகை பெரும்பாலும் எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்காது இருந்தமை குறிப்பிடத்தக்கது.

புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் ரஷ்யாவில் உள்ள உயர்மட்ட தலைவர்களுக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புடின் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது, வரும் காலங்களில் புடினுக்கு எதாவது ஏற்பட்டால் என்ன செய்யலாம் என்பது குறித்து விரைவில் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போர் தொடங்கியது முதலே புடினின் உடல்நிலையில் சீரற்ற நிலை காணப்படுவதாக தொடர்ந்தும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இருப்பினும், புடின் ஆரோக்கியமாக இருப்பதாகவே ரஷ்யா கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.