தளபதி பிரிகோஜினின் மரணத்தின் பின்னணியில் யார்..! விளக்கமளித்த ஜெலென்ஸ்கி

 

ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் படையின் தளபதி யெவ்ஜெனி பிரிகோஜினின் மரணத்திற்கும் உக்ரைனுக்கும் சம்மந்தம் இல்லையென அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

“குறித்த தாக்குதலில் நாங்கள் ஈடுபடவில்லை, இதில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும் என்று நான் நினைக்கிறேன்,” என அவர் பத்திரிகையாளர்களிடம் விளக்கியிருந்தார்.

எம்ப்ரேர் லெகஸி 600 ரக விமானத்தில் மொஸ்கோவிலிருந்து சென்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரை நோக்கி பிரிகோஜின் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

திடீரென விமானம் தலை குப்புறப் பாய்ந்தது. 30 விநாடிகளில் அந்த விமானம் 8000 அடி கீழே விழுந்தது என்று விமானத்தை ட்ராக் செய்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெட் விமானத்தில் பயணம் செய்த 3 பணியாளர்கள், 7 பயணிகள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த 7 பயணிகளில் புடினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினும் ஒருவர் என தகவல் வெளியாகியது.

மேலும் ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள, விமானத்தில் இருந்தவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் பிரிகோஜினின் பெயர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.