இஸ்ரேலின் பிடிவாதம்! 35 ரொக்கெட்களால் பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லா: தொடரும் பதற்றம்

இஸ்ரேல் ஹமாஸ் போர் பதற்றம் குறைவடைந்துள்ள நிலையில், வடக்கு இஸ்ரேலின் மவுண்ட் மெரான் பகுதியை நோக்கி ஹிஸ்புல்லா அமைப்பினர் 35 உந்துகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர்.

240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலியாக சிலர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் பிடியில் உள்ள மீதமுள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், பலஸ்தீனர்களில் மொத்தம் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது.

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றி கிடைக்கும் வரை போரானது தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார்.

இதனால், எகிப்திய எல்லையையொட்டிய காசாவின் தெற்கு பகுதியில் அமைந்த ரபா நகரை நோக்கி செல்ல திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அண்டை நாடான லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலின் மவுண்ட் மெரான் பகுதியை நோக்கி ஹிஸ்புல்லா அமைப்பினர் 35 ரொக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அறிந்து, பதிலடிக்கு தயாரானார்கள்.

இதன்படி, இஸ்ரேலின் போர் விமானங்கள் பறந்து சென்று, ஹன்னியே, ஜிப்சித், பைசரியே மற்றும் மன்சவுரி பகுதியில் அமைந்த இராணுவ தளம் மற்றும் ஹிஜ்புல்லா அமைப்பினரின் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.