கிளிநொச்சி கல்லாறு பேய்பாறைப்பட்டி பகுதியில் கடற் தொழிலுக்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர், தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்
குறித்த நபர் கடற்படையினரால் கடுமையாக தாக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை தருமபுரம் பொலிஸார் ஏற்க மறுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று திங்கட்கிழமை முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து பேப்பாறைப்பிட்டிக்கு கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவரை கடந்த 21 ஆம் திகதி 10க்கும் மேற்பட்ட கடற்படையினர் கை கால்களை கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அவதானித்த சிலர் தருமபுரம் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கிய நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற அவர்கள் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு தரும்புரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடற்படையின் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட நபர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை தருமபுரம் ஏற்க மறுத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நபரால் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யாழ் பிராந்திய காரியத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.