ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் விரிசல்: சாடுகிறார் சாணக்கியன்



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்நாட்டுக்குள்ளே பிரச்சினைகளைத் தீர்க்காமல் இருப்பதற்கு தங்களுக்கும் மொட்டுக் கட்சியினருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதெனக் காட்டுவதற்கான முயற்சியினை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நேற்று (12.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்துள்ளதாவது, தற்பொழுது நாட்டிலே நடக்கும் விடயங்களைப் பார்த்தால் மீண்டும் ஒருமுறை தமிழருக்கு எதிரான ஒரு சூழல் அமைவதற்கான சாத்தியங்கள் தெரிகின்றது.

மிக அவதானமாக நாங்கள் செயல்பட வேண்டிய காலப்பகுதி இதிலேயே குறிப்பாக அண்மையிலே சரத் வீரசேகர, எங்களுடைய வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் நீதி அரசர்களைப் பற்றிக் கூட குற்றம் சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருக்கின்றது.

குருந்தூர் மலையில் தன்னை பேசவிடவில்லை எனக் கூறி, ஒரு குற்றச்சாட்டுக்காக நீதி அரசர்கள் புரிந்து கொள்ள வேண்டும் இது சிங்கள நாடு.

சிங்கள நாட்டிலே நாங்கள் தான் ஆட்சியாளர்கள் என்று கூறி இவ்வாறான மனப்பாங்குகள் காரணத்தினால் தான் நாடு இந்த வங்குரோத்து சூழ்நிலையை அடைந்திருக்கின்றது நாங்களும் பல இடங்களில் இதுபற்றி பேசி இருக்கின்றோம்.

இதற்கான தீர்வை காண வேண்டும் ஜனாதிபதி முன்னிலையில் கூட காத்திருக்கின்றோம்.

இன்று ஜூலை 12ஆம் திகதி ஆகியிருக்கின்றது. ஜூலை 30க்கிடையிலே ஒரு முடிவை ஜனாதிபதி சொல்வதாகக் கூறி இருக்கின்றார்.

ஆனால் இதிலே ஒரு சாதகமான முடிவை சொல்லக்கூடிய சூழல் இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

இதற்கான காரணம் அண்மைக் காலமாக நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால் மொட்டுக்கட்சியை தன்னுடைய கட்சியினுடைய மாவட்ட கிளைகள் பிரதேச கிளைகள் தொகுதிகளைப் போன்ற விடயங்களிலே புனரமைப்புகள் செய்து கூட்டங்களை நடத்திக் கொண்டு வருகின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார்.