மீண்டும் மீண்டும் பரபரப்பு.. : நடுவானில் இரண்டு ஏர் இந்திய விமானங்களில் ஏற்பட்ட கோளாறு : அதிர்ச்சியடைந்த பயணிகள்



 வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு பயணித்த இரண்டு ஏர் இந்தியா விமானங்களில், நடுவானில் வைத்து இயந்திர கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தரையிறக்கப்பட்டுள்ளன.

சென் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்கு, கொல்கத்தா வழியாக பயணித்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் பயணிகள் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று(17) அதிகாலை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

விமானத்தின் இடது என்ஜினில் தொழில்நுட்பப் கோளாறு ஏற்பட்டதால், கொல்கத்தாவில் இருந்து மும்பை நோக்கி புறப்பட வேண்டிய விமானம் தாமதமானது என இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


ஏர் இந்தியா ஏஐ180 விமானம், சென் பிரான்சிஸ்கோவிலிருந்து திட்டமிட்டபடி புறப்பட்டது.

ஆனால், இரவு 12:45 மணிக்கு கொல்கத்தா நோக்கி வந்தவுடன் இடது என்ஜினில் பிரச்சனை ஏற்பட்டது.

இதன் காரணமாக, 4 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் தரையிறக்க முடியாமல் வான்வெளியில் இருந்துள்ளது. மேலும், அதிகாலை 5:20 மணியளவில், பயணிகளை விமானத்தில் இருந்து இறக்க அறிவிக்கப்பட்டது.

விமானத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது என விமானி தெரிவித்துள்ளார்.

விமான நிலைய தரையிலிருந்து எடுத்த காணொளியில், ஏர் இந்தியா விமானத்தின் இடது என்ஜினை, தரையில் நிறுத்தப்பட்ட நிலையில், நிலைய பணியாளர்கள் பரிசோதனை செய்யும் காட்சி காணப்படுகிறது.

இதேபோன்று, ஹொங்கொங்கில் இருந்து டெல்லிக்கு நேற்று பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
 
நடுவானில் பறந்தபோது விமானி, தொழில்நுட்பக் கோளாறை கண்டறிந்த நிலையில், மீண்டும் விமானத்தை ஹொங்கொங்கிற்கு திருப்பியுள்ளார்.

கோளாறு ஏற்பட்ட போயிங் ட்ரீம்லைனர் விமானத்தைப் பணியாளர்கள் ஆய்வு செய்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

 ஐந்து நாட்கள் முன்னர், ஏர் இந்தியா விமானம் ஏஐ-171, அஹமதாபாத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்திலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்டு, புறப்பட்ட சில விநாடிகளுக்குள்ளே, மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.