இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கி விபத்து..!


துனிசியாவிலிருந்து இத்தாலிக்கு மத்திய தரைக் கடலூடாக அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் மாயமாகி உள்ளனர் எனவும் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய தரைக்கடலின் ஸ்ஃபாக்ஸ் பகுதியில் உள்ள லூவாடாவில் படகு மூழ்கியதாக துனிசிய நீதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 20 பேரை துனிசிய கடலோர காவல்படையினர் மீட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின்(IOM) காணாமல் போன புலம்பெயர்ந்தோர் திட்டத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 2014 முதல் தற்போது வரை மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற 25,000 க்கும் அதிகமானோர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

சமீபத்திய மாதங்களில், துனிசியா மற்றும் லிபியாவிலிருந்து இத்தாலியை நோக்கி கடக்கும் முயற்சிகள் அதிகரித்துள்ளதாகவும், துனிசிய கடற்கரையில் நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.