தமிழர் பகுதிகளில் மீட்கப்பட்ட வெடிகுண்டுகள்

திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கன்னியா பகுதியில் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இன்று (22) காலை கன்னியா சுடுதண்ணீர் கிணற்றுக்கு செல்லும் வீதிக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பூர் நவரெட்ணபுரம் காட்டுப் பகுதியில் ரி56 ரக துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இது மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.