ரஷ்யாவுடனான போருக்கு தயார்! போலந்தின் அதிரடி அறிவிப்பு

அனைத்து வகையான போர் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக போலந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிசா கோனேக் தெரிவித்துள்ளார். 

அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரஷ்யா, போலந்து நாட்டின் மீது தாக்குதல்களை மேற்கொள்வது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது, நோட்டோ அமைப்பில் இணைவது குறித்த உக்ரைனின் விருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பமான உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் தற்போது போலந்து மீதான போர் அச்சுறுத்தலுக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார் .

அனைத்து வகையான போர் சூழ்நிலைகளையும் நாம் எதிர்பார்க்கிறோம் என்றும், அதில் மோசமானவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், இன்று நாம் இருக்கும் சூழ்நிலையில் ஒரு பாதுகாப்பு அமைச்சரின் பணி அதுதான் எனவும் அவர் கூறியிருந்தார்.

தவிரவும், நாங்கள் எல்லா சூழ்நிலைகளுக்கும் தயாராக இருக்கிறோம், இதனை வெறும் பேச்சுக்காக மாத்திரம் சொல்லாமல், செயலிலும் காட்ட போலந்து இராணுவம் இறங்கியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், போர் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு தயாராகும் உறுதியான நடவடிக்கைகளை ஏற்கனவே போலந்து தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெரிய அளவிலான ஆயுதக் கொள்முதல் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றபோதிலும், ஒவ்வொரு இராணுவ வீரருக்கான தனிப்பட்ட ஆயுத தேவைகளையும், ஏனைய பாதுகாப்பு தேவைகளையும் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம் என பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தார். 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான மோதலில் ரஷ்யா வெற்றி பெற்றால், நேட்டோவுடன் இணைந்த நாடுகளை குறிவைப்பதற்கு முன்பு அவர் தனது கவனத்தை மால்டோவா பக்கம் திருப்புவார் என்றும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

மேலும் அடுத்த "ஐந்து முதல் எட்டு ஆண்டுகளில்" ரஷ்யாவால் நேட்டோ மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களை தவிர்க்க முடியாது என ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் பகிர்ந்துகொண்ட கருத்துகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், நேட்டோ ரஷ்யாவுடனான மோதல்களிற்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது