வவுனியா சென்ற ரணில்! உள்நுழைய முற்பட்ட இருவர் கைது: தொடரும் பதற்ற சூழல்

வடக்கிற்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (05) வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த நிலையில் வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாநகரசபை கலாசார மண்டபத்தினை அண்மித்துள்ள நூலக வீதி , நகரசபை வீதி என்பன முடக்கப்பட்டுள்ளது. 

வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் இன்று 10 மணிக்கு ஆரம்பமான வன்னி மாவட்டத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அதிபர் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிலர் அதிபரைச் சந்திப்பதற்காக உள்நுழைய முற்பட்ட வேளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதேவேளை குறித்த பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புத் துணியைக் காட்டியவாறு எதிர்ப்புக் கோசங்களை எழுப்பினர்.

இந்நிலையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட  வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்

இதேவேளை நேற்றைய தினம் (04) யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.