கனவுலகில் மிதக்கிறார் ரணில் - சஜித் தரப்பு சாட்டையடி


“பொதுஜன பெரமுவினர் தன்னை ஏமாற்றுகின்றனர் எனத்தெரியாது, அதிபர் ரணில் விக்ரமசிங்க கனவு உலகில் இருக்கின்றார்” என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அதிபரால் முன்வைக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அதிபர் இப்போது கனவு உலகில் இருக்கின்றார். மொட்டுக் கட்சியினர் அவரை ஏமாற்றுகின்றனர் என்று தெரியாமல் இருக்கின்றார். அவர் அடுத்த வருடம் ஓகஸ்ட் வரையிலேயே அதிபராக இருப்பார். வேலைகளை செய்வதற்காக நாடு முழுவதும் பயணிக்க வேண்டும்.

இவர்கள் இணைந்து அதிபர் வேட்பாளராக தன்னை அறிவிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார். மக்கள் போராட்டத்தின் போது மொட்டுக் கட்சிக்காரர்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டது. அதன்படியே ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்தனர். இன்னும் அதிபர் மொட்டுக் கட்சியின் பாதுகாவலர் மட்டுமே” என்றார்.