கைவிலங்குடன் அழைத்து செல்லப்பட்ட ராஜித விளக்கமறியலில்..!


இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (29) அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிபதியின் உத்தரவின்படி, ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தன்னை கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் இன்றைய தினம் காலை ஆஜரானதை தொடர்ந்து அவரை   விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டில் கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை சட்ட நடைமுறைகளை மீறி கொரிய நிறுவனத்திற்கு மாற்றியதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ.26.2 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக 2013 ஆம் ஆண்டில் பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணையம் இந்த விசாரணையை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.