குரான் எரிக்கப்பட்ட சம்பவம்-சுவீடன் நகரங்களில் நான்காவது நாளாக மோதல்!

தீவிர வலதுசாரி புலம்பெயர்ந்த எதிர்ப்புக் குழுவினால் வெளிப்படையாக குரான் எரிக்கப்பட்டதால் தூண்டப்பட்ட மோதல்கள், பல சுவீடன் நகரங்களில் நான்காவது நாளாக மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன.நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு நகரமான நோர்கோபிங்கில் கலவரக்காரர்கள் மீது பொலிஸார் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இந்த மோதலின் போது, பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது மற்றும் குறைந்தது 17பேர் கைது செய்யப்பட்டனர்.சனிக்கிழமையன்று தெற்கு நகரமான மால்மோவில் தீவிர வலதுசாரி பேரணியின் போது பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.முன்னதாக ஈரான் மற்றும் ஈராக் அரசாங்கங்கள் சுவீடன் தூதர்களை வரவழைத்து, எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.ஸ்ட்ராம் குர்ஸ் அல்லது ஹார்ட் லைன் இயக்கத்தை வழிநடத்தும் டேனிஷ்- ஸ்வீடிஷ் தராஸ்மஸ் பலுடன், தான் இஸ்லாத்தின் புனிதமான நூலை எரித்துவிட்டதாகவும், அந்த செயலை மீண்டும் செய்வதாகவும் கூறினார்.வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்டாக்ஹோமின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் லிங்கோபிங் மற்றும் நோர்கோபிங் நகரங்கள் உட்பட தீவிர வலதுசாரிக் குழு நிகழ்வுகளைத் திட்டமிட்ட இடங்களில் அமைதியின்மையில் குறைந்தது 16 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததாகவும் பல பொலிஸ் வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் இனவெறி உள்ளிட்ட குற்றங்களுக்காக 2020இல் ஒரு மாத சிறைத்தண்டனை பெற்ற பலுடன், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோன்ற குர்ஆனை எரிக்கத் திட்டமிட்டிருந்தாக கூறப்படுகின்றது.