உக்ரேன் போருக்கு விரைவில் தீர்வு : ரஷ்ய, சீன ஜனாதிபதிகள் கூட்டாக அறிவிப்பு




ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதி நேற்று சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு அரசியல் ரீதியில் விரைவில் தீர்வு காணப்படும் என, தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புடின் நேற்று சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரைடியாடியுள்ளனர்.

இரு தலைவர்களும் இதற்கு முன், 40க்கும் மேற்பட்ட முறை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறது.

சீன ஜனாதிபதி ஜின்பிங் சமீபத்தில், பிரான்ஸ் செர்பியா, ஹங்கேரி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, ரஷ்யாவுக்கு ஆயுதங்களை விற்கக் கூடாது என, சீன ஜனாதிபதியை, ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தின.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளமைக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் புடின், ஜின்பிங் ஆகியோர் நேற்று நடத்திய பேச்சுக்கு பின், கூட்டாக பேட்டியளித்தனர். மேலும் கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.
 
இவற்றில்,
 
சீனா, ரஷ்யா இடையே நல்ல நட்பு உள்ளது. இதை யாராலும் சீர்குலைக்க முடியாது. எந்தத் தடை இருந்தாலும், எங்களுடைய நட்பு தொடரும். எங்களுடைய உள்நாட்டு விவகாரங்கள், நட்பு மற்றும் இறையாண்மை மீதான மூன்றாம் நாடுகளின் தலையீட்டை எதிர்க்கிறோம்.
 
உக்ரைன் மீதான போருக்கு விரைவில் அரசியல் ரீதியில் தீர்வு ஏற்படும். இதில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் சீனா செய்யும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள கார்கீவ் பிராந்தியத்தை குறிவைத்து ரஷியா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தனது வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  
ஜெலன்ஸ்கி இந்த வாரம் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகள் செல்ல இருந்ததாகவும், ஆனால் அவர் தனது பயணத்தை காலவரையின்றி தள்ளிவைத்துள்ளதாகவும் ஜனாதபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கருங்கடல் மற்றும் கிரிமியா தீப கற்ப பகுதிகளை குறிவைத்து உக்ரைன் வீசிய 10-க்கும் மேற்பட்ட டிரோன்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை சுட்டு வீழ்த்தியதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.