தொல்பொருள் என்ற போர்வையில் சூறையாடப்படும் மக்கள் காணிகள் : குகதாசன் சீற்றம்


தொல்பொருள் என்ற போர்வையில் மக்கள் விவசாய காணிகளை சூறையாட நினைக்க வேண்டாமென  இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை (Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று ( 09) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முந்தைய நாளிலும் நாடாளுமன்ற அமர்வில், நாட்டிலே அரிசி விலை உயர்வு குறித்து பேசப்பட்டது.

இதில் முதன்மை வகிப்பது தொல்பொருள் துறையாகும், தொல்பொருள் துறையானது தமிழ் மக்கள் சில நூற்றாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்ற விவசாய நிலங்களை தமது தொல்பொருள் இடங்களாக அறிவித்து கையகப்படுத்தி வருகின்றது.

இவ் அரிசி விலை உயர்வுக்கு வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி அரசினது அங்கங்களான பல்வேறு திணைக்களங்களும் காரணமாக உள்ளன.

இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி தொல்பொருள்துறை, வனத்துறை வனவிலங்குத்துறை, துறைமுக அதிகார சபை மற்றும் புத்தபிக்குகள் ஆகியோர் பிடித்து வைத்துள்ள மக்களுடைய காணிகளை விடுவித்து, மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடவும் அதன் வழி நெல் உள்ளிட்ட உணவு உற்பத்தியினை பெருக்கவும் செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.