இலங்கையில் கார்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு |



கடந்த மாதத்தினை விட இந்த மாதம் கார்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்திருந்தது.

இருப்பினும், தனியார் வாகனங்களினை இறக்குமதி செய்வதற்கு இன்னமும் அனுமதி அளிக்கப்படவில்லை இதனால் மீண்டும் வாகனங்களின் விலைகள் உயர்வடைந்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலை இப்படியே தொடருமானால் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த மாதம் முதல் சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தியிருந்தது..

இதில் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் கடந்த இரண்டு வருடங்களாக தளர்த்தப்படாமல் நடைமுறையில் இருந்தது என்றாலும், தற்போது பொதுப் போக்குவரத்துக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய மாத்திரமே அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

எரிபொருளுக்கான QR முறை கடந்த முதலாம் திகதி முதல் நீக்கப்பட்டதன் பின்னர் வாகனங்களுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக கார்களுக்கான தேவை அதிகரித்திருப்பதனால், பிரத்தியேகமாக கார்களுக்கான விலைகள் அதிகரித்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.