தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு - ரணில் சாதகமான பதில்

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுக எதிர்பார்த்துள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இதனை தவிர்த்து வடக்கு, கிழக்கு மாத்திரமின்றி ஏனைய மாகாணங்களுக்கும் சில அதிகாரங்களை வழங்குமாறு அவர்கள் கோரியுள்ளதாகவும், அவை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முன்னெடுக்கப்படுமெனவும், சர்வதேச ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இலங்கை முழுவதும் பல வகையான தமிழர்கள் வசிக்கிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் என அவர்களை வகைப்படுத்தலாம்.

தமிழர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை நாம் நிவர்த்தி செய்து வருகிறோம். உலகின் எந்த நாடுகளிலும் நடைபெறாக ஒரு விடயம் இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்றது.

அங்கு சிங்களவர்களின் சனத்தொகை குறைவடைந்து தமிழர்களின் சனத்தொகை அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பகுதிகளில் உள்ள தமிழர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக தரங்களை நாம் மேம்படுத்த வேண்டும்.

இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்துமாறு தமிழ் அரசியல்வாதிகள் கோரியுள்ளனர். அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசாங்கம் தலையிடாது. இது தொடர்பான உத்தரவாதத்தை எம்மால் வழங்க முடியும்.

இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கான ஆயத்தங்களையும் நாம் செய்துள்ளோம். இதனை தவிர்த்து வேறு சில அதிகாரங்களையும் தமிழ் அரசியல்வாதிகள் எம்மிடம் கோரியுள்ளனர்.

அவை வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களுக்கு மாத்திரமின்றி இலங்கையில் உள்ள ஏனைய ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கி நடைமுறைப்படுத்தப்படும்” என அவர் கூறியுள்ளார்.