ஹமாஸிற்கு வேண்டுகோள் விடுத்த பாப்பரசர்


ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் ஹமாஸிடமும் இஸ்ரேலிடமும் பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மீது கடந்த 7ம் திகதி ஹமாஸ், பலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தின.இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1405 பேர் கொல்லப்பட்டதுடன் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 200 க்கும் மேற்பட்டோரை காசாவுக்குள் பிணைக்கைதிகளாக கடத்தி சென்றனர்.

இதனிடையே, கத்தார், எகிப்து நாடுகளின் பேச்சுவார்த்தையையடுத்து பிணைக்கைதிகளில் 2 அமெரிக்கர்கள், 2 இஸ்ரேலியர்கள் என மொத்தம் 4 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்துள்ளனர்.

இதனிடையே, போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா முனைக்கு எகிப்தில் இருந்து மனிதாபிமான உதவி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், குறைவான அளவிலேயே மனிதாபிமான உதவி பொருட்கள் காசாவுக்குள் நுழைகின்றன.

இதனால், காசாவுக்கு அதிக அளவில் உதவி பொருள்களை கொண்டு செல்ல அனுமதியளிக்கும்படி இஸ்ரேலுக்கு பல தரப்பும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், பிணைக்கைதிகளை விடுவிக்கும்படி ஹமாஸ் அமைப்புக்கும், மனிதாபிமான உதவிப்பொருட்கள் காசாவுக்குள் நுழைய அனுமதிக்கும்படி இஸ்ரேலுக்கும் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு, ஹமாஸ் வசம் இன்னும் 223 பேர் பிணைக்கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.