காசாவில் பொது சுகாதார நெருக்கடி மோசமடைந்து வரும் சூழலில், அங்குள்ள கழிவு நீரில் போலியோ தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காசா சுகாதார அமைச்சு, போலியோ தொற்று பதிப்புக் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அமைச்சு கடந்த திங்கட்கிழமை டெலிகிராமில் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்த நிலைமை காசா குடிருப்பாளர்கள் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு கடந்த ஒக்டோபர் தொடக்கம் இஸ்ரேலின் இனப்படுகொலை காரணமாக பொது சுகாதார அவசர நிலை மோசமடைவதற்கான சமிக்ஞையாக இது உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மலம் – வாய் வழியாக ஏற்படும் இந்தத் தொற்று நரம்பு மண்டலத்தில் ஊடுருவி பக்கவாதத்தை ஏற்படுத்தும். தடுப்புசி காரணமாக 1988 தொடக்கம் போலியோ சம்பவங்கள் உலகெங்கும் 99 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளன. இதனை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘காசாவில் கழிவுநீர் மாதிரிகளில் தொற்று நோய் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பு காசாவிற்கு 1 மில்லியன் போலியோ தடுப்பூசிகளை அனுப்பவுள்ளது. எனினும் தடுப்பூசிகள் குழந்தைகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய போர் நிறுத்தம் தேவை’ என்றார்.
எனினும் சர்வதேச மத்தியஸ்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய சுற்றுப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் நீடித்து வரும் முன்மொழிவு ஒன்றில் பிரதமர் பெஞ்மின் நெதன்யாகுவின் இஸ்ரேலிய அரசு புதிய நிபந்தைகளை நுழைத்து போர் நிறுத்தம் ஒன்றை தடுத்து வருவதாக காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தத்தில் தொடர்ந்து முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. காசாவில் தொடர்ந்து 100க்கும் அதிகமான பணயக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களை மீட்டுவர அழுத்தும் கொடுக்கும் வகையில் இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகு அரசுக்கு எதிராக வாராந்தம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோமில் புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற நிலையில் இஸ்ரேலிய அதிகாரிகள் அங்கிருந்து திரும்பியபோதும் அந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. உடன்பாடு ஒன்றை நெருங்கி இருப்பதாக இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனுசரணை வழங்கும் அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மே மாதம் முன்வைத்த போர் நிறுத்தத் திட்டத்தின் அடிப்படையிலேயே தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் இஸ்ரேல் அளித்த பதில்களும் இதில் புதிய நிபந்தனைகளாக உள்ளடக்கப்பட்டிருப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
‘புதிய நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளை அமைப்பதன் மூலம் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதை தள்ளிப்போடுவது, ஏமாற்றுவது மற்றும் தவிர்க்கும் மூலோபாயத்திற்கு நெதன்யாகு திரும்பி இருப்பதையே மத்தியஸ்தர்கள் வழங்கிய செய்தி தெளிவாகக் காட்டுகிறது’ என்று ஹமாஸ் அமைப்பு திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.