புங்குடுதீவிலிருந்து மாடுகளை கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

யாழ்ப்பாணம் - புங்குடுதீவிலிருந்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவிலிருந்து மண்டைதீவு நோக்கி சட்டவிரோதமாக மாடுகள் கடத்தப்படுவதாகக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய,  விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட 08 மாடுகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.