நெடுங்கேணி காவல் நிலையம் முன்பாக மது அருந்தும் காவல்துறையினர்!

வவுனியா-நெடுங்கேணி காவல் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய (25) தினம் காவல் நிலையம் முன்பாக உள்ள பிரதான வீதியில் மது அருந்தும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.

குறித்த உத்தியோகத்தர் நேற்றைய தினம் (25.03) இரவு வேளையில் பிரதான வீதியில் காவல் நிலையம் முன்பாக மது அருந்திக்கொண்டு இருக்கும் போது அந்த பகுதிக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் அவரிடம் சென்று வீதியில் மது அருந்த கூடாது என்பது தெரியாதா.? என்று கேட்க, அவரை ஒருமையில் பேசியுள்ளதுடன் தான் காவல்துறை உத்தியோகத்தர் என்றும் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன்,  அந்த இடத்திற்கு வந்த மேலும் ஒருவர் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ போ என்று தெரிவிக்கின்ற காணொளி ஒன்று வெளியாகியுள்ளதுடன் அவரும் மது போதையில் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பொது இடத்தில் இருந்து மது அருந்தியமை தொடர்பில் 119 என்ற காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்த போதும், காவல்நிலையத்தில் குறித்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்த வில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகள் இடம்பெறும் போது, நெடுங்கேணி காவல்துறையினர் வழிபாடு செய்தவர்களிடம் காட்டுமிராண்டி தனமாக நடந்த கொண்டிருந்ததுடன் 8 பேரை கைதும் செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.