இளைஞரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவல்துறையினர்! யாழில் மற்றுமொரு சம்பவம் |

யாழ்.சுன்னாகம் காவல் நிலையத்தில் இளைஞன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவம் ஒன்றினை அடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சுன்னாகம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து குறித்த இளைஞனை காவல்துறையினர் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான இளைஞன் அவசர சிகிச்சைக்காக கடந்த(28) ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சுன்னாகம் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் ​போது தான் கொடூரமாக தாக்கப்பட்டதாக குறித்த இளைஞன் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இளைஞனைப் பரிசோதித்த மருத்துவர்கள்,காவல்துறையினரின்  தாக்குதலினால் அவரது விலா மற்றும் முதுகெலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

இந்த நிலையில், அண்மையில் வட்டுக்கோட்டை காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் அலெக்ஸ் என்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.