நடுவானில் திடீரென பற்றியெரிந்த விமானம் -காணொலி



அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் திடீரென பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி காலை ஓகியோவின் கொலம்பஸ் ஜான் கிளேன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, பீனிக்ஸ் நகருக்கு அமெரிக்காவின் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் பயணித்த பயணிகள் பெரியதாக சத்தம் வருவதாக கூறியுள்ளனர்.

அப்போது தான் விமானத்தின் எஞ்ஜின் பகுதியில் தீ பிடித்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவசர அவசரமாக விமானம் மீண்டும் கொலம்பஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்நிலையில் தரையிறங்கிய விமானத்தின் எஞ்ஜின் பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை, தீயணைப்பு படையினர் அணைத்துள்ளனர். உடனே பயணிகள் பாதுகாப்பாக மாற்று விமானம் மூலம் பீனிக்ஸ் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து விமானத்தின் எஞ்ஜின் பகுதியில் பறவை மோதியதால், தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது என ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜான் க்ளென் கொலம்பஸ் சர்வதேச விமான நிலையம், 'இன்று காலை ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட விமானத்தின் எஞ்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதும் எங்கள் அவசரக் குழுவினர் பதிலளித்தனர். விமானம் பத்திரமாக தரையிறங்கியது.மேலும் விமான நிலையம் தொடர்ந்து இயங்கி வருகிறது' என ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

நடுவானில் விமான என்ஜினில் தீ பற்றி எரிவதை தரையிலிருந்து பார்த்தவர்கள் அதனை காணொலி எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்விபத்து சம்பவத்தின் போது விமானத்தில் 173 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்துள்ளனர்.