காசாவில் பரிதாபம்..! : ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் 20 பேர் உயிரிழப்பு

முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான இறுதிக் கட்ட இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றபோதும் காசாவில் தொடர்ந்து மோதல் நீடிப்பதோடு, அங்கு ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து வெடித்த இந்தப் போர் தற்போது ஆறாவது மாதத்தை தொட்டுள்ளது. கடந்த நவம்பரில் இடம்பெற்ற ஒரு வார போர் நிறுத்தத்தை தவிர்த்து காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 31 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் 70 வீதத்திற்கு அதிகமானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

மத்திய காசாவில் கடந்த புதன் இரவு தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் குண்டு தாக்குதல்களில் அங்கு குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 இதன்போது நுஸைரத் அகதி முகாம் மற்றும் டெயிர் அல் பலாவில் உள்ள வீடுகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்திய இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் மேலும் 83 பேர் கொல்லப்பட்டு 142 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 38,800 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 72,298 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ{க்கு இடையில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

கெய்ரோவில் அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தத்தில் ஹமாஸ் பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கும் பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெற்று வந்தபோதும் இஸ்ரேலிய பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவில்லை. எதிர்வரும் மார்ச் 10 அல்லது 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ரமழான் மாதத்திற்கு முன்னர் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கே முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இழுபறிகள் நீடித்து வருகின்றபோதும், உடன்படிக்கை ஒன்று இன்னும் சாத்தியமாக உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இந்நிலையில் காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகாரித்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு புதன்கிழமை (06) கூறியிருந்தது. இவர்களில் பாதி அளவானவர்கள் குழந்தைகளாவர்.

காசாவின் வடக்கு பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகள் மாத்திரமே கிடைத்திருக்கும் சூழலில் அங்கு பட்டினி பேரழிவு மட்டத்தை எட்டி இருப்பதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

‘குழந்தைகள் பட்டினி தொடர்பான நோய்களால் இறப்பதோடு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று அந்த அமைப்பு குறிப்பிட்டது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 15 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாகவும் அவர் காசா நகரின் அல் ஷிபா மருத்துவமனையில் உயிரிழந்திருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சு கூறியது.

இந்த அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா கூறியதாவது, ‘வடக்கு காசாவில் பஞ்சம் உயிர் ஆபத்து மட்டத்தை எட்டி இருப்பதோடு காசாவுக்கு மேலும் உதவி மற்றும் மருந்து விநியோகங்கள் கிடைக்காதபட்சத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்கக் கூடும்’ என்றார்.