''எனது சகோதரனை கடத்தியது பிள்ளையான் தான், கோட்டாவும் பொறுப்பு கூற வேண்டும்.." பரபரப்பு தகவல் வெளியானது



எனது சகோதரர் காணாமல் போனமைக்கும் பிள்ளையானிற்கும் தொடர்புள்ளது என நான் உறுதியாக நம்புகின்றேன். இது குறித்து எனது மனதில் எந்த சந்தேகமும் இல்லை என 2006 இல் காணாமலாக்கப்பட்ட கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத்தின் சகோதரர் ராஜ் தெரிவித்துள்ளார்

தமிழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  

 2006ம் ஆண்டு உங்கள் சகோதரர் கடத்தப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தெரிவிக்க முடியுமா? என ஊடகவியலாளரால் தொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

 

அவ்வேளை கிழக்குபல்கலைகழகத்தில் பல பிரச்சினைகள் காணப்பட்டன, ஊழல்கள் காணப்பட்டன. அதற்கு காரணமானவர்களை எச்சரித்த எனது சகோதரர் அவற்றை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.
இது இயல்பாகவே பதற்றத்தை உருவாக்கியது. எனது சகோதரர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன பின்னர் அவை அச்சுறுத்தல்களாக மாறின.
கருணா, பிள்ளையான் அவர்களுடன் தொடர்புபட்டவர்களிடமிருந்து அவர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார். அவரது குடும்பத்தின் பாதுகாப்பு அவரின் கரிசனைக்குரிய விடயமாக மாறியது.

ஆனால் இத்தனைக்கு அப்பாலும் அவர் மட்டக்கள ப்பில் தங்கியிருந்து தனது பணியை தொடர முயன்றார், ஆனால் இறுதியில் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியது. அவர் பாதுகாப்பிற்காக கொழும்பிற்கு செல்ல தீர்மானித்தார்.
நான் அவரை லண்டனிற்கு வருமாறு மன்றாடிக் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவர் உத்தியோகபூர்வமாக தனதுபதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்தார். அவரின் இறுதி தொலைபேசி உரையாடல் எனக்கு நினைவில் இருக்கின்றது, 2006 டிசம்பர் 15ம் திகதி இறுதி நிர்வாக கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக அவர் தெரிவித்தார். அவருடன் நான் தொலைபேசியில் உரை யாடியது அதுவே இறுதிதடவை என அவர் கூறினார்.

இதனையடுத்து  அதிகாரிகள் அவ்வேளை எவ்வாறு செயற்பட்டனர்? இந்த விடயத்தை தீவிரமாக எடுத்தனரா? என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த காணாமலாக்கப்பட்ட கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத்தின் சகோதரர் ராஜ்

 அதிகாரிகள் இந்த விடயத்தை தீவிரமாக எடுத்திருந்தால், அவருக்கு என்ன நடந்தது என்பது தற்போது எங்களிற்கு தெரியவந்திருக்கும். அவர்கள் அதனை புறக்கணித்தனர் என்பதற்கு அப்பால் இடம்பெற்ற விடயங்களுடன் தொடர்புபட்டிருந்தனர்.
 
எனது சகோதரர் பதவி விலகிய வேளைபாதுகாப்பு கோரி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றை எழுதினார். இறுதி கூட்டமன்றும் விசேடமாக பாதுகாப்பை கோரினார், ஆனால் அவர்கள் உரிய பாதுகாப்பை வழங்கவில்லை. மாறாக அவர்கள் அந்த இறுதி கூட்டத்தில் அவர் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்கள். தனது நிலையை நிரூபிப்பதற்கான மின்னஞ்சல் கடிதம் அவரிடமிருந்தது. ஆனால் அவர்கள் அவரை கைவிட்டனர். அவர் காணாமல் போனதில் அவர்களிற்கு தொடர்புள்ளது என கூறினார்.

இதனைத் தொடர்ந்து பிள்ளையான் சமீபத்தில் விசாரணை செய்யப்பட்டமை குறித்து உங்கள்
கருத்து என்ன? உங்கள் சகோதரர் காணாமல் போனமைக்கும் இதற்கும் தொடர்பிருக்குமா? என ஊடகவியலாளர் கேட்டார்.
இதற்கு பதிலளித்த அவர்,
 
 எனது சகோதரர் காணாமல்போனமைக்கும் பிள்ளையானிற்கும் தொடர்புள்ளது என நான் உறுதியாக நம்புகின்றேன். இது குறித்து எனது மனதி;ல் எந்த சந்தேகமும் இல்லை,பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊழல்களிற்கும் பிள்ளையானிற்கும் தொடர்புள்ளது என தெரிவிக்கும் பத்திரிகை செய்திகளை நான் வாசித்துள்ளேன்,
எனது சகோதரர் இந்த ஊழல்களை எதிர்த்தார். எனது சகோதரர் ஒருபோதும் ஊர்க்கதைகளை கதைத்தவர் இல்லை. அரசியலில் ஈடுபட்டவர் இல்லை, அவர் சரியானதைதான் செய்தார், அப்படித்தான் வாழ்ந்தார்.

இதேநேரம் பிள்ளையானிற்கு எதிரான விசாரணை அரசியல் நோக்கங்களை கொண்டதா அல்லது உண்மையானதா? உங்களின் கருத்து என்ன? என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளதித்த அவர்,

 முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை. ஆனால் அரசாங்கத்தின் விசாரணைகள் நீதிதொடர்பானவை அல்ல. இது அரசியல் தொடர்பானது. பல அரசாங்கங்கள் வந்து சென்றிருக்கின்றன, இவர்களில் எவரும் நீதியை வழங்குவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை என அவர் கூறினார்.