மெத்தை வெடித்ததில் பலியான நபர் - காரணம் இது தான்!

இந்திய மாநிலம் மேகாலயாவில் மின்சார மெத்தையில் தூங்கிக் கொண்டிருந்த நபர், மெத்தை வெடித்ததில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயா மாநிலம், கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டம் ஸ்மிட் நகரில் உள்ள வீட்டில் நேற்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது. இதனால் அருகில் இருந்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டை திறந்து பார்த்தபோது நபர் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபரின் பெயர் பின்சுக்லாங் என்பதும், மின்சார மெத்தை வெடித்ததில் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.

மேலும் கடந்த 3 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பின்சுக்லாங், ஏற்கனவே மூன்று முறை தற்கொலை முயன்றுள்ளார் என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

தேவைக்கு அதிகமாக மின்சார மெத்தை சார்ஜ் செய்யப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.