பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அவல நிலை - உயிரைப் பணயம் வைத்து வாழும் மக்கள்!



பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் மக்களுக்கு உரிய நேரத்தில் எரிவாயு கிடைக்காமல் பரிதவிக்கின்றனர் என அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நெருக்கடிக்கு மத்தியில், சமையல் எரிவாயுவைப் பெறுவதற்கு மக்கள் மேற்கொள்ளும் மாற்று நடவடிக்கைகளை காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

சிலிண்டர்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட எரிவாயுவை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் குறைந்து வருவதால், மக்கள் சமையல் எரிவாயுவை சேமிக்க பெரிய பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைகளில் இயற்கை எரிவாயுவை இந்த பிளாஸ்டிக் பைகளில் நிரப்புகின்றனர். கசிவைத் தவிர்க்க, விற்பனையாளர்கள் அந்த பையை வால்வு மூலம் இறுக்கமாக மூடுகின்றனர்.

பைகள் பின்னர் மக்களுக்கு விற்கப்படுகின்றன. அதனை வாங்கிச் செல்லும் மக்கள் ஒரு சிறிய மின்சார குழாயின் உதவியுடன் எரிவாயுவைப் பயன்படுத்துகிறார்கள்.

பிளாஸ்டிக் பைகளில் மூன்று முதல் நான்கு கிலோ வரை எரிவாயுவை நிரப்ப சுமார் ஒரு மணி நேரம் ஆவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இரண்டு சிறுவர்கள் எரிவாயு நிரப்பப்பட்ட இரண்டு பெரிய வெள்ளை பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இந்த பிளாஸ்டிக் பைகள் வெடித்து விபத்து ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதனால் அச்சம் ஏற்பட்டாலும், சிலிண்டர்களின் விலை உயர்வால் ஏழைகளாகிய எங்களுக்கு வேறு வழியில்லை, என அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்னர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறன.