இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையிலான அமைதிப்பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவானதையடுத்து காஸாவில் உள்ள மக்கள் நடனமாடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதியன்று ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்த நிலையில், 251 பேர் பிணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் காஸாவில் ஒரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள், இரண்டு நாட்களான நிலையில் இந்த ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.
காஸாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளில் 20 ஆயிரத்து 179 குழந்தைகள் உட்பட குறைந்தது 67 ஆயிரத்து 183 பேர் உயிரிழந்தனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.
இதேநேரம் ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஒப்பந்தம் "காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரும், ஆக்கிரமிப்புப் படைகள் முழுமையாக திரும்பப் பெறுவதை உறுதி செய்யும், மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும், கைதிகள் பரிமாற்றத்தை செயல்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார், எகிப்து, துருக்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் மத்தியஸ்த முயற்சிகளுக்கு ஹமாஸ் நன்றி தெரிவித்துள்ளது.
"இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்குவதை உறுதி செய்ய" டிரம்ப் மற்றும் பிற கட்சிகளுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது.
காஸா மக்கள் "ஒப்பிடமுடியாத தைரியம், மரியாதை மற்றும் வீரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்" என்று ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
"சுதந்திரம், மற்றும் சுயநிர்ணயம் அடையப்படும் வரை நாங்கள் எங்கள் மக்களின் தேசிய உரிமைகளை ஒருபோதும் கைவிடமாட்டோம்." என்றும் தெரிவித்துள்ளது.
இந்த உடன்பாடு நீடித்தால், ட்ரம்ப் இதை அவரது இரண்டாவது பதவிக்காலத்தின் மகுடம் சூட்டும் வெளியுறவுக் கொள்கை சாதனையாக சுட்டிக்காட்டுவார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காஸாவில் உள்ள பாலத்தீனியர்கள் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் செய்தியைக் கொண்டாடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
பாலத்தீன பத்திரிகையாளர் சயீத் முகமது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இரவுநேர காட்சிகளில், டெய்ர் அல்-பாலா எனும் நகரில் உள்ள அல்-அக்சா வைத்தியசாலைக்கு வெளியே ஆண்களும் பெண்களும் இசைக்கு நடனமாடுவதை காண முடிந்தது. அவர்கள் விசில் அடித்து, கைதட்டி இறைவனை போற்றி சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.
பத்திரிகையாளர் முகமது அல்-ஹடாட்டின் மற்றொரு வீடியோவில் காஸாவின் வேறு ஒரு பகுதியில் இளைஞர்கள் கூடி நடனமாடுவதை காண முடிந்தது.
ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இந்த அமைதி ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கும், காஸாவில் மனிதாபிமான உதவிகள் வழங்குவதை அதிகரிப்பதற்கும், ஐ.நா ஆதரவளிக்கும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவித்தல், நிரந்தர போர் நிறுத்தத்திற்கு கட்டுப்படுதல், உடனடியாக காஸாவிற்குள் மனிதாபிமான பொருட்களை அனுமதித்தல் உள்ளிட்ட உடன்பாட்டின் நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்றும் குட்டரெஸ் அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.
"பாலத்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனியர்கள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ உதவும் வகையில் இந்த முக்கியமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். துன்பம் முடிவுக்கு வர வேண்டும்," என்றும் குட்டரெஸ் வலியுறுத்தினார்.