ட்ரம்பின் கருத்துக்கு பலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு – உலகெங்கும் வலுக்கும் எதிர்ப்பு



காசாவில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றிரும் அதேநேரம் காசாவில் இருந்து ஒருபோதும் வெளியேறுவதில்லை என்று பலஸ்தீனர்கள் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் வெளியாகி வரும் நிலையில், இதனை எதிர்ப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரஸ், காசாவில் இனச்சுத்திகரிப்புக்கு எதிராகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா விஜயம் மேற்கொண்டிருக்கும் நெதன்யாகுவுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியபோதே ட்ரம்ப் கடந்த செவ்வாயன்று இந்த அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டார்.
காசாவில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றி அந்தப் பகுதியை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அபிவிருத்தி செய்வதாக ட்ரம்ப் கூறினார்.

இந்நிலையில் காசாவில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் ட்ரம்பின் யோசனையில் எந்தத் தவறும் இல்லை என்று நெதன்யாகு கூறியுள்ளார்.
பொக்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நெதன்யாகு, ட்ரம்பின் திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகக் குறிப்பிட்டதோடு காசாவில் இருந்து வெளியேற விரும்புபவர்களை அனுமதிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.


‘அதில் என்ன தவறு இருக்கிறது? அவர்களால் வெளியேற முடியும், பின்னர் அவர்களால் மீண்டும் திரும்ப முடியும். அவர்களை வேறு இடத்தில் குடியமர்த்திய பின்னர் திரும்பி வர முடியும். ஆனால் காசாவை கட்டியெழுப்ப வேண்டி உள்ளது’ என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்தப் போரில் எத்தனை அழிவுகள், உயிரிழப்புகள் இடம்பெற்றபோதும் இது நடக்காத ஒன்று. எல்லைகள் திறக்கப்பட்டு குடியேற்றத்திற்கு வாய்ப்பு அழிக்கப்பட்டாலும் கூட நாம் வெளியேற மாட்டோம் என பலஸ்தீனர்கள் உறுதியாக தெரிவித்தனர்.
 
எவ்வாறாயினும் காசாவில் இருந்து குடியிருப்பாளர்கள் தன்னார்வத்துடன் வெளியேறுவதை அனுமதிக்கும் திட்டம் ஒன்றுக்கு தயாராகும்படி இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ், இராணுவத்திற்கு உத்தரவிட்டிருப்பதாக இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


அமெரிக்க ஜனாதிபதியின் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை அடுத்தே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ‘ஜனாதிபதி ட்ரம்பின் தைரியமான திட்டத்தை நான் வரவேற்கிறேன். உலகெங்கும் சாதாரணமாக காசா குடியிருப்பாளர்கள் குடியேறுவதற்கு மற்றும் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று காட்ஸ் இஸ்ரேலின் ‘சென்னல் 12’ தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் சவூதி அரேபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகள் ட்ரம்பின் திட்டத்தை கடுமையாக நிராகரித்துள்ளன. ‘எமது மக்களின் உரிமைகள் மீறப்படுவதை அனுமதிக்க மாட்டோம்’ என்று சாடிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், காசா பலஸ்தீன நாட்டின் ஒரு பகுதி என்றும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவது சர்வதேச சட்டத்தை மோசமாக மீறுவதாக இருக்கும் என்றும் எச்சரித்தார்.

காசாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேலுடன் போர் புரிந்த ஹமாஸ் அமைப்பு, ட்ரம்பின் திட்டம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல் எனவும் தெரிவித்தார்.