பாலஸ்தீனத்தில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காணாத பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கும் : ஐ.நா


பேரழிவுக்கு உள்ளாகி இருக்கும் பலஸ்தீன நிலப்பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காணாத பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஏழு மாதங்களாக இஸ்ரேல் இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும் அனைத்து வீடுகளையும் மீளக் கட்டுவதற்கு 80 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ளும் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் மதிப்பிடப்பட்டுள்ளது.

‘அழிவுகளின் அளவு பாரியதாகவும் முன்னெப்போதும் இல்லாததாகவும் உள்ளது… உலக மக்கள் இவ்வாறான ஒரு முயற்சியில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கையாண்டதில்லை’ என்று அரபு நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிராந்திய பணிப்பாளர் அப்தல்லா அல் தர்தாரி ஜோர்தானில் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.


இது பலஸ்தீனர்கள் பல தலைமுறைகளுக்கு சமூக பொருளாதார பதிப்பை செலுத்தும் என்று மதிப்பிட்டிருக்கும் அந்த அமைப்பு உடன் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தொடரும் போரில் மத்தியஸ்தர்களால் இதுவரை ஒரு வாரம் போர் நிறுத்தம் ஒன்றை மாத்திரமே எட்ட முடிந்தது. கடந்த நவம்பரில் இடம்பெற்ற அந்தப் போர் நிறுத்தத்தில் காசாவில் பிடித்துச் செல்லப்பட்ட சுமார் 240 பணயக்கைதிகளில் 105 பேர் விடுவிக்கப்பட்டனர்.


பலஸ்தீன போராளிகள் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் பிடிக்கப்பட்ட பயணக்கைதிகளில் தொடர்ந்து 129 பேர் அந்தப் போராளிகளின் பிடியில் இருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது.

இதில் 35 பேர் உயிரிழந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டிருப்பதோடு 49 வயது ட்ரோர் ஓர் என்பவர் உயிரிழந்திருப்பதை இஸ்ரேல் நேற்று உறுதி செய்தது. இவரின் இரு பிள்ளைகள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நிலையில் கடந்த நவம்பரில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.


பணயக்கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கைக்கு செல்லும்படி கோரும் ஆர்ப்பாட்டங்கள் இஸ்ரேலில் தொடர்ந்து இடம்பெற்று வருவதோடு அது பிரதமர் பெஞ்சமின் நெதயாகு அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இஸ்ரேல் காசா மீதான தாக்குதல்களை தொடர்ந்து தீவிரமாக முன்னெடுத்து வருவதோடு உடன்படிக்கை எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தெற்கு காசாவின் ரபா மீது படையெடுப்பை முன்னெடுக்கப்போவதாக நெதன்யாகு எச்சரித்துள்ளார்.