இலங்கை விமானப்படையில் சேர முண்டியடிக்கும் யாழ்ப்பாண இளைஞர்கள் : குவியும் விண்ணப்பங்கள்


இலங்கை விமானப்படையில் சேர்வதற்கு சுமார் 250க்கும் மேற்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாக சிறிலங்கா அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'எயர் டட்டூ 2024' கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியின் போதே இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இலங்கை விமானப்படை கடந்த மார்ச் 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை 'எயர் டட்டூ 2024' கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடத்தியது.

இந்தக் கண்காட்சியானது ஒரு திருப்புமுனையாக விடயமாக அமைந்தது மாத்திரமன்றி, இது விமானப்படைக்கும் யாழ்ப்பாண சமூகத்திற்கும் இடையிலான உறவுகளில் ஒரு சாத்தியமான போக்கையும் உருவாக்கியுள்ளது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வானது கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கான களமாக அமைந்தது மாத்திரமன்றி யாழ்ப்பாணத்தின் இளைஞர்களிடமிருந்து விமானப்படையின் மீதான ஆர்வத்தை புதுப்பித்ததையும் காணக்கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறிலங்கா அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க கண்காட்சியின் இறுதி நாளான நேற்று (10) கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க, யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இந்த திட்டத்தை கருத்தில் கொண்டு விமானப்படை ஆட்சேர்ப்பு நிகழ்ச்சியை நடத்தியதாகவும், யாழ்ப்பாணத்தில் இருந்து 250 இளைஞர்கள் விமானப்படையில் சேர விண்ணப்பித்ததாகவும் கூறினார்.

"100 க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள அதிகாரிகள் மற்றும் 156 பேர் மற்ற பதவிகளைத் தேடும் ஆர்வத்தின் இந்த எழுச்சி, விமானப்படை பற்றிய சமூகத்தின் பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது," என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உதவுவதற்காக பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்தமைக்காக சாகல ரத்நாயக்க விமானப்படைக்கு நன்றி தெரிவித்தார்.

"நாடு இக்கட்டான காலங்களை கடந்திருந்தது, ஆனால் தற்போது நாம் அந்த காலகட்டத்தை முறியடித்துள்ளோம். வடக்கிற்கு குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதிக்கு முக்கியத்துவம் அளித்து முன்னோக்கிச் செல்லும் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்," என்று அவர் கூறினார்.

வடக்கு மற்றும் கிழக்கில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதுடன், உற்பத்தி கைத்தொழில்களை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு கடுமையாக உழைத்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.