உக்ரேன் - ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில், உக்ரேன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டிருந்ததாகவும், அதை பிரதமர் மோடி உட்பட உலகத் தலைவர்கள் தலையிட்டு தடுத்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் உள்ள சிரேஸ்ட அதிகாரிகள் 2 பேர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமரச முயற்சிகள் மேற்கொண்டார்.
ரஷ்ய ஜனாதிபதி புதின், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினார். அத்துடன் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வலியுறுத்தினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) புதினை சந்தித்த போது, ‘‘இது போருக்கான காலம் இல்லை’’ என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது:
உக்ரேன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டது. அவ்வாறு ரஷ்யா அணு ஆயுத தாக்குதலை நடத்தினால், கடந்த 1945-ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகள் வீசியதற்கு பிறகு நடக்கும் முதல் பேரழிவாகி விடும்.
அவ்வாறு ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால், அதை எப்படி தடுப்பது என்று ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட உலக தலைவர்கள் பலர் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின்னர்தான் இந்த விடயத்தில் புடினிடம் நேரடியாக பேசி அணுகுண்டு தாக்குதலை தடுத்து நிறுத்த உதவி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க ஜனாதிபதி பைடன் நிர்வாகம் கூறியது.
சீனா உட்பட மற்ற நாட்டு தலைவர்களையும் தொடர்பு கொண்டு இந்த அச்சத்தை தெரிவித்தோம். அவர்கள் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் பேசினர்.
அதேபோல் பிரதமர் மோடியும் ஜனாதிபதி புடினிடம் இதுதொடர்பாக பேசியுள்ளார். அவரது உதவியால் உக்ரேன் மீதான அணுகுண்டு தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது என அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
--